நமது பாரம்பரிய சமையல் முறைகளில் தவறாமல் இடம்பெறும் கறிவேப்பிலை, மிகவும் சிறியதாக இருந்தாலும் அதில் காணப்படும் நன்மைகள் ஏராளம். நாம் சாதாரணமாக உணவு உண்ணும்போது இடையூறாக இருக்கிறது என்றோ பிடிக்காது என்றோ கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்கிறோம். ஆனால், அதன் நன்மைகள் குறித்து தெரிந்தால் நீங்கள் ஒருபோதும் அதனை ஒதுக்கி வைக்கமாட்டீர்கள்.
கிருஷி ஜாக்ரான் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கும், நீரிழிவு நோய் மேலாண்மைக்கும், இரைப்பை குடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கும் முக்கியமாக பயன்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
கறிவேப்பிலையை வழக்கமாக நுகர்ந்தாலே இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று கிருஷி ஜாக்ரானில் உள்ள ஒரு சுகாதார நிபுணர் கூறுகிறார். ஏனெனில் அவை ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. அவை மாவுச்சத்தை குளுக்கோஸாக மாற்றுவதைத் தடுக்க உதவுகின்றன. இதனால் நீரிழிவு அளவைக் கட்டுப்படுத்துகின்றன என்று விளக்கம் தெரிவிக்கிறார்.
கர்ப்பிணி பெண்களுக்கு
கறிவேப்பிலையின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி சொல்லும் குமட்டல் மற்றும் வாந்தியை இது கட்டுப்படுத்துகிறது. கறிவேப்பிலை செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டி குமட்டலை எளிதாக்குகிறது.
இரைப்பை குடல் ஆரோக்கியம்
கறிவேப்பிலையின் இலைகள் செரிமான நொதிகளால் நிரம்பியுள்ளதால் அவற்றை உண்பதால் அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்னைகள் குணமாகும். மேலும், மலச்சிக்கலை குணப்படுத்தவும் பயன்படுகின்றன.
அதுமட்டுமின்றி, கண் பார்வையை சீராக்குதல், இரத்த சோகை, கெட்ட கொழுப்பினை குறைத்தல், கல்லீரலை பாதுகாத்தல், வயிற்றுப்போக்கு, மூல நோய் சிகிச்சைக்கு மற்றும் பல நோய்கள் வராமல் தடுக்கவும் பயன்படுகிறது.
No comments:
Post a Comment