உலகில்
மனிதர்கள் உயிர்வாழ காற்று, நீர், சூரிய ஓளி ஆகியவை அத்தியாவசியமோ, அப்படி
இந்தியாவில் குடிமகனாக இருக்க ஆதார் அட்டை அத்தியாவசியம். எரிவாயு, உரம்
உள்ளிட்ட அரசின் மானியத்தொகையை பெறுவதிலிருந்து அவசர தேவைக்காக
பயன்படுத்தும் ஆம்புலன்ஸ் வரை ஆதார் எண் எல்லா இடங்களிலும்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையை
கட்டாயப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் காட்டு கத்தல் கத்தினாலும்,
காதில் போட்டுக்கொள்ளாத மத்திய அரசு அடுத்து எதில் ஆதாரை புகுத்தலாம் என
மேலும், மேலும் யோசித்து வருகிறது. இவ்வாறு, அரசின் முக்கிய திட்டங்களில்
பிணைந்துப் போன ஆதார் அட்டையை நேபாளம், பூடான் செல்வதற்கான ஆவணமாக
பயன்படுத்த முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவின்
அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடானுக்கு செல்ல பாஸ்போர்ட், விசா
தேவையில்லை. சாதாரண வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு
ஆகியவை இருந்தாலே நீங்கள் அந்த இரண்டு நாட்டிற்கும் சுற்றுலா ட்ரிப்
அடித்து வரலாம்.
இந்தியாவிலிருந்து சாலை அல்லது
ரெயில் மார்க்கமாக நேபாளம், பூடான் நாடுகளுக்கு செல்லும் போது, எல்லையில்
இருக்கும் சோதனை அலுவலகத்தில், மேற்கண்ட ஆவணங்களை காட்டி அனுமதி அட்டையை
பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கிடையில், நேபாளம்
பூடான் ஆகிய நாடுகளுக்கு செல்பவர்கள் இனி ஆதார் அட்டையை காட்டி அனுமதி பெற
முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.
ஆதார் அட்டைக்கு பதிலாக தேர்தல்
கமிஷனால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை அல்லது உரிய பாஸ்போர்ட்டை
காண்பித்து அங்கு செல்லலாம். மேலும், 15 வயதுக்கு குறைவானவர்கள் மற்றும் 65
வயதை கடந்தவர்கள் தங்களது அடையாளம் மற்றும் வயதை நிரூபிப்பதற்கு தேவையான
சான்றாக வருமான வரித்துறையினரின் பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ரேசன்
அட்டை, மத்திய அரசின் சுகாதார திட்ட உறுப்பினருக்கான அடையாள அட்டை
ஆகியவற்றை காட்டி மேற்கண்ட நாடுகளுக்கு செல்லலாம் என அந்த அறிவிப்பு
தெரிவிக்கிறது.
பூடான் நாட்டில் மட்டும் சுமார்
60 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் அங்குள்ள
நீர் மின்நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். மேலும், இந்தியா - பூடான்
இடையே தினந்தோறும் ஆறாயிரம் முதல் பத்தாயிரம் தொழிலாளர்கள் சென்று
வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment