ஆங்கில மொழித்துறை துவங்க அனுமதி கோரும் கல்லூரிகளின் எண்ணிக்கை நாளுக்கு
நாள் அதிகரித்துவரும் நிலையில், சொற்ப அளவிலான கல்லூரிகளே தமிழ்த்துறை
துவங்க ஆர்வம் காட்டி வருகின்றன.பாரதியார் பல்கலையின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி,
ஈரோடு மாவட்டங்களில், 108 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இக்கல்லூரிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள்
பயிற்றுவிக்கப்படுகின்றன. அரசு கலைக் கல்லூரிகளில் மட்டுமே, தமிழ்,
ஆங்கிலம் ஆகிய மொழிப் பாடங்களுக்கும், பொருளாதாரம், கணிதம், வரலாறு,
புவியியல், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட கலை, அறிவியல் பாடங்களுக்கும்
முக்கியத்துவம் தரப்படுகிறது.
அரசு உதவிபெறும்கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் பெரும்பாலும், பி.காம்.,
பி.காம்., (சி.ஏ.,), காட்சி தொடர்பியல், உயிர் வேதியியல் உள்ளிட்ட மவுசு
அதிகமுள்ள பாடங்களே உள்ளன. சமீபகாலமாக ஆங்கிலத் துறை துவங்கவும் தனியார்
கல்லூரிகள் ஆர்வம் காட்டி வருகின்றன; தமிழ் மீதான ஆர்வம், அந்தளவுக்கு
இல்லை.நடப்பாண்டில், இரு கல்லூரிகள் தமிழ் துறை தொடங்க அனுமதி வேண்டியும்,
மூன்று கல்லூரிகள் ஆங்கிலத்துறை தொடங்க அனுமதி வேண்டியும் பாரதியார்
பல்கலையிடம் விண்ணப்பித்துள்ளன.பல்கலை பதிவாளர் செந்திவாசன் கூறுகையில்,
''ஆரம்பத்தில், 14 கல்லூரிகளில் தமிழ் துறை இருந்தது; சமீபத்தில் இரு
கல்லூரிகள் இத்துறை துவங்க விண்ணப்பித்துள்ளன.
அதேபோல், 67 கல்லூரிகளில் ஆங்கிலத் துறை இருந்தது; தற்போது, புதிதாக மூன்று
கல்லூரிகள் இத்துறை துவங்க அனுமதி கோரியுள்ளன. மாணவர்களின்
விருப்பங்களுக்கேற்ப கல்லூரிகளும் புதிய பாடங்கள் துவங்க முன்வருகின்றன,''
என்றார்.தற்போது தமிழ் பயிற்று விக்கப்படும், 14 கல்லூரிகளில், 720
மாணவர்கள் மட்டுமே இளங்கலை தமிழ் படிக்கின்றனர். ஆனால், ஆங்கிலம்
பயிற்றுவிக்கப்படும், 67 கல்லூரிகளில், 4200 மாணவர்கள் இளங்கலை ஆங்கிலம்
படிக்கின்றனர். கல்லூரி பட்ட வகுப்பில் சேரும் மாணவர்களிடையே, தமிழ் மீதான
ஆர்வம் குறைந்து வருவதையே, இது காட்டுகிறது.
No comments:
Post a Comment