அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள்
விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்தி:
சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையால் 21 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த
விடுதிகளில் 2015-2016-ஆம் கல்வியாண்டில் ஏற்படும் காலியிடங்களுக்கு
புதிதாக மாணவ, மாணவியரை சேர்க்க பள்ளி, கல்லூரி உள்ளிட்ட தொழிற்கல்வி
நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. மேலும், விண்ணப்பதாரரின் பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியருக்கு இருப்பிடம், உணவு வசதி செய்து தரப்படும்.
இந்த
விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் அவரவர் பயிலும் பள்ளி, கல்லூரி,
தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல பள்ளி
விடுதிகளின் காப்பாளரிடம் இருந்து விடுதி சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை
வரும் 5-ஆம் தேதி முதலும், கல்லூரி விடுதிகளில் கல்லூரி திறக்கும் நாளில்
இருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவத்தில் கோரியுள்ள
ஆவணங்களுடன் 3 "பாஸ்போர்ட்' அளவிலான புகைப்படங்கள், தங்களது குடும்ப அட்டை
நகல், வங்கிக் கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதார் அட்டை இருப்பின் அதன்
நகல் ஆகியவற்றில் சுய சான்றொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும்,
பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரின்
சான்றொப்பம் பெற்று உரிய சான்றுகளுடன் பள்ளி மாணவர்கள் வரும் 19-ஆம்
தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் ஜூலை 14-ஆம் தேதிக்குள்ளும் தொடர்புடைய
விடுதி காப்பாளரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என அதில்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment